Sunday 17 February 2019

காந்தளின் சிறப்புகள்


                கார்த்திகை மாதங்களில் பற்றிப் படர்ந்து தன் நீளிதழ்கள் விரித்துத் தீச் சுவாலையென மலர்ந்திருக்கும் காந்தள் மலர்கள் அக்காலத்திலும் இக்காலத்திலும் தமிழர் வாழ்வியலோடு கலந்திருந்து ஏதோவொரு வகையில் அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாய்த் தன்னை அடையாளப்படுத்தி நிற்கின்றதென்பது மறு(றை)க்க முடியாத உண்மையாகும்.இது பச்சை, வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என வண்ணங்களின் கலவையாய் எண்ணங்களின் வெளிப்பாடாய் மலர்ந்திருந்து எக்காலத்திலும் பார்ப்போரை வியக்க வைக்கும் பேராற்றல் கொண்ட மலராகும்.
         
                  காந்தள் மலரானது ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய “லில்லி ஆசியே” எனப்படும் வகையினைச் சேர்ந்ததாகும். இம்மலரானது  அறிவியல் மொழியில் "குளோரியோசா சுப்பர்பா" என அழைக்கப்படுகின்றது. "குளோரியோசா” என்பது கண்களைக் கவரக்கூடியது எனவும் “சுப்பர்பா” என்பது சிறப்பானது எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் கண்களைக் கவரக்கூடிய அதியுச்ச அழகினைக் கொண்ட மலரெனப் பொருள்படும். இதன் பொருளையே கிராமத்து வழக்கத்தில் " கண்வலிப்பூ" என்ற மற்றொரு பெயர் கொண்டுள்ளது. அதாவது கண் வலிக்கும் அளவிற்குக் கண்கொட்டாமல் பார்க்கக்கூடிய அழகினை உடையது என்பது இதன் பெயர்காரணமாகும்.
 

                காந்தள் மலரானது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆப்பிரிக்கா நாடுகளான எதியோப்பியா, சோமாலியா, சூடான், கென்யா, தன்சானியா, உகண்டா, செனகல், மொசாம்பிக், போட்சுவானா, நம்பியா, சுவாசிலாண்ட், தென்னாபிரிக்கா, மடகசுகார் மற்றும் ; இந்தியத் துணைக்கண்டமான இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் ; தென்சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா, லாயோசு, மியான்மார், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

சிறப்புத் தகவல்கள்
காந்தள் இனங்களில் ஒன்றான குளோரியோசா ரோத்சில்டியானா என்ற பூவினையே ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வே தனது நாட்டுப் பூவாகக் கொண்டிருக்கின்றது.

 காந்தள் தமிழீழத்தின் நாட்டுப் பூவாகவும், தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் அடையாளத்தப்படுகின்றது.

பண்டைய மருத்துவத்திலும் நவீன மருத்துவத்திலும் காந்தள் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய மருத்துவத்தில் காந்தள் வெண்தோண்டி என அழைக்கப்பட்டது.

காந்தளின் மற்றைய பாகங்களை விடக் கிழங்கில் அதிக கோல்சிசின் இருப்பதால் கிழங்கை உட்கொண்டால் இறப்பு நேர்கின்றது. பிற பாகங்களை நேரடியாக உட்கொள்வதால் முடி கொட்டுதல் உள்ளிட்ட பாதிப்புகள் நேரிடும். இறப்பை விளைவிக்கும் இக் கோல்சிசின் பாரம்பரிய மற்றும் நவீன மருத்து முறையின் அருமருந்தாகும். "சுபர்பின்", "கோல்சிசின்", "கோல்ச்சிகோசைடு" என்னும் மருந்துப் பொருட்கள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதால் இது இன்று வணிக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றது.

"ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை சிறப்பித்துக் கூறும் ஈழத் திருநாட்டில் இன்றும் மண்ணிற்காய் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் காந்தள் மலரே பயன்படுத்தப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூரும் மதிப்பிற்குரிய நாளில் பயன்படுத்தப்படும் அதியுயர் சிறப்பினைக் காந்தள் கொண்டுள்ளது.

1947 ஆம் ஆண்டில், தற்போது சிம்பாப்வே என்றழைக்கப்படுகின்ற ரொதேசியாவிற்கு பயணித்தபோது அரசி எலிசபெத் II அவர்களது இருபத்தோராவது பிறந்தநாளுக்கு இந்த மலரின் வடிவத்தில் ஒரு வைர ஆடையூசி பரிசளிக்கப்பட்டது. 1953ஆம் ஆண்டு இராணி எலிசபெத் மற்றும் இளவரசி மார்கரெட் ஆகியோர் பொதுநலவாய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான காந்தள் மலர்த் தோற்றம் கொண்ட ஆடையூசிகள் வழங்கப்பட்டன.
                   
ரொதேசியா மற்றும் நியாசலாண்ட் ஆகியவற்றின் கூட்டமைப்பு நாணயத்திலும், ரொதேசியா மற்றும் நியாசலாண்ட் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரிவுக்குப் பின்னர் ரொதேசியா வெளியிட்ட நாணயத்திலும் காந்தள் மலரானது இடம்பெறுகின்றது. ரொதேசியா சிம்பாப்வேயாக மாற்றம் பெற்ற பின்னர் வெளியிடப்பட்ட  நாணயத்தில் காந்தள் இலைகள் கொடியோடு இடம்பெறுகின்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அந்நாட்டுப் பணத் தாள்களிலும் காந்தள் மலரானது இடம்பெறுகின்றது.

•இந்தியா, சிம்பாப்வே, கபோனிசு, ரோதேசியா,அமெரிக்கா, நமீபியா, காம்பியா, உகாண்டா, தாய்லாந்து, மலேசியா, ருவாண்டா, செனகல்,மத்திய ஆப்பிரிக்கா, கேமரூன், இந்தோனேசியா, காங்கோ, சுவாசிலாந்து, கேபனோசியா, அங்கோலா,சாம்பியா, மாலைதீவு, மொசாம்பிக், வியட்நாம், நாம்பியா, கினியா, மாலி, பிரான்சு, புருண்டி ஆகிய நாடுகள் தாம் வெளியிட்ட அஞ்சல் தலைகளிலும் காந்தளைப் பொறித்து அழகு பார்த்துள்ளனர்.


மலர்க்கொத்து, ஆடை அணிகலன்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பின் போது காந்தளின் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

("சங்க இலக்கியங்களில் காந்தள்" என்ற எனது நூலிலிருந்து)

                          -பொலிகையூர் ரேகா

காந்தளின் சிறப்புகள்                 கார்த்திகை மாதங்களில் பற்றிப் படர்ந்து தன் நீளிதழ்கள் விரித்துத் தீச் சுவாலையென மலர்ந்திருக்கும...